MAKE YOUR CONTRIBUTIONS

Welcome To Sri Merupuram Mahabhadrakaliamman Devasthanam, London.
Lets Know and Enjoy the Divine & Gracious vibration of Devi and the Sprituality lies within you on your presence.
Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings..


work in progress ..Will be updated soon.....





திருவிழா
திருவிழாவாவது யாது?

ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கும் திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.

மகோத்ஸவம் என்பதன் பொருள் என்ன?

மஹா - பெரிய
உத் - உயர்வான

ஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.

திருவிழா ஆரம்பிப்பதற்கு முந்திய நாள் மண் எடுப்பதும், முளை இடுவதும் எதைக் குறிக்கின்றன?

மண்ணைப் பதம் பண்ணி வித்திடுவது படைத்தலைக் குறிக்கின்றது. கொடியேற்றம் எவ்வாறு நடைபெறுகிறது?

நந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயிற்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாம். கொடியேற்றத்தின் தத்துவம் யாது?

(அ) சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை அதனை ஒப்ப ஆன்மாக்கள் தூய்மை உடையவர்களானால், அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பதை இது குறிக்கிறது.

(ஆ) திருவிழாக்களின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப்போகின்றான் என்பதாகும்.




வாகனத் தத்துவம்
மர வாகனத் தத்துவம் யாது?

இதை ‘விருத்திக் கிரம சிருஷ்டி கோலம்” என்பர். மரத்தின் இலைகள், கிளைகள் முதலியன போல தத்துவங்களாகவும், எண்ணிறந்த சீவராசிகளாகவும் கடவுள் விளங்குகிறார் என்பதை இது குறிக்கின்றது. மரத்தின் வேரில் பீடமிட்டு அதில் அம்மையப்பராகக் கடவுள் விளங்குகிறார். அதாவது, இத்தகைய படைப்புக்கெல்லாம் வேராக இருப்பது அருள் என்ற சக்தியோடு கூடிய அறிவு என்ற சிவமே என்பதாகும்.

சூரியப் பிரபை, சந்திரப் பிரபைகளில் இறைவன் எழுந்தருளி வருவது எதைக் குறிக்கின்றது?

இது ‘விருத்திக் கிரம ஸ்திதிக் கோலம்” உலகத்திலுள்ள உயிர்கள் பிழைத்து இருப்பதற்குக் காரணம் சூரிய வெப்பம். அவ்வெப்பம் இல்லாவிடில் புசிப்பதற்கு புல்லும் கிடைக்காது. அவ்வெப்பமே கடலில் நீரையுண்டு மேகங்கள் மூலமாய் மழையைத் தருவிக்கின்றது. இன்னும் எல்லாவகையான தொழில்களுக்கும் அது மூலசக்தியாய் விளங்குகின்றது. எனவே உலகத்தைக் காப்பாற்றுவது சூரியனது தொழில். சந்திரன் பிரபையிலும் இறைவனை வைத்து வணங்குதல் காத்தல் தொழிலுக்கு அறிகுறியாகும்.




அழகிய சித்திரத்தேர்

இலங்கை திருநெல்வேலியூர் சிற்பக்கலைஞர் திருவாளர் நல்லைநாதன் நகுலேஸ்வரன் ஆசாரியார் அவர்களால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் சிற்ப வேலைபாடுகள் அனைத்தும் அவரது கைவண்ணத்திலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 21 அடி உயரத்தேரானது 31 கலசங்களை கொண்டமைந்தமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்வரன் அவர்களுக்கு ஆலயத்தினரால் கலைவள்ளல் கௌரவம் வழங்கப்பட்டது.

தேரின் தத்துவங்கள்

தேரின் அமைப்பு பிண்டத்திற்ச் சமானம். விசுவ விராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். உச்சியிலிக்கும் சோடசாந்தம், அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம், அதற்கடுத்தது மஸ்தக ஆதி ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக மத்திய ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக அந்தஸ்தானம், அதற்கடுத்தது புரவ மத்திஸ்தானம், நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் தத்துவக் கால்கள், முன் மூன்று துறைகள் கண்கள், பின்னவை சிகையும் இடவலக் காதுகளுமாகும். இறைவன் எழுந்தருளியிருக்கும் கேடய பீடம் முப்பாழ், குதிரைகள் சூரிய சந்திர கலைகள், சாரதி அக்னிகலை, இவை நாசியாகும். அடுத்த அடுக்கு கண்டஸ்தானம், அதையடுத்த அடுக்கு இருதய ஸ்தானம், அதையடுத்த சக்கரங்களும் தச வாயுக்கள், இறைவன் இதற்குக் கர்த்தா தான் ஒருவனே எள்றுணர்த்தி இவ்வாறமைந்த பிண்ட தத்துவ சரீரமாகிய இரத்தத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலியிலிருந்து நாபிக்கும், அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி லயப்படுத்தி, முறையே இரதக் குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண் வழியாகவும், நடுவழியாகவும், மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புரவ மத்திக்கும் ஏற்றி லயப்பட்டு, கம்மாவிருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது. மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன் எரித்தது ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கும் அறிகுறியாகிறது




ஆலய வழிபாடு
ஆலயத்தில் வழிபடுவதால் நமக்கு கிடைக்கும் சிறப்பான பலன் என்ன?

பாலில் நெய் மறைந்து இருப்பது போல, எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கின்றான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவதைப்போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளக்கிக் காட்சி அளிக்கின்றான். மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதனாலும், துதிப்பதானாலும், வழிபடுவதனாலும், வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.

கொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயின்றி, வெந்து சாம்பலாகாது. சூரிய காந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகிவிடுகின்றது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல் சூரியகாந்தக் கண்ணாடியின் கீழே வரும் வெயிலுக்கு உண்டு.

பரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழே உள்ள இடத்திற்குச் சூரியகாந்தக் கண்ணாடி பாய்ச்சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது. வெயிலில் வேட்டியை காயவைப்பது போலாகும் ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும் திருக்கோயிலில் இறைவனை வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.

‘‘மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே”
என்பது சிவஞானபோதம்.......

நமது திருக்கோவில்களிலுள்ள திருவுருவங்கள் தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் ஆகிய ஆன்றோர்களாலும் நிறுவப்பட்டு துதிக்கப்பட்;ட காரணத்தால் ஆணவ இருளையகற்றி வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற நாம் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதே சிறந்ததாகும்.




ஸ்ரீசக்ரம்

ஸ்ரீசக்ரத்திற்கு 43 முக்கோணம். ஆவை முறையே சிவகோணம் - 3, சக்திகோணம் - 5, அஷ்டதளம், ஷோடசதளம், மூன்று வளயங்கள், 4- சக்கரங்கள், பிந்து நாதம் கலை இவைகளுமாகச் சேர்ந்து அமைவதாகும். இந்த ஸ்ரீசக்ரத்திலே யோக சாஸ்திரங்களில் விளக்கி உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களும் அடங்கியுள்ளன.

அதாவது முக்கோணம் மூலாதாரமாகவும், அஷ்டாரம் சுவாதிஷ்டனமாகவும், தசாரம் மணிபூரகமாகவும், பஹிர் தசாரம் அனாஹதமாகவும், மன்வச்ரம் விசுத்தியாகவும், பிந்து ஆக்ஞையாகவும் கூறப்படுகின்றது. (அண்டத்திலே சுவாதிஷ்டான க்ஷேத்ரமாக திருஆனைக்கா விளங்கின்றது.)

சரீரத்திலே மூலாதாரத்திற்கு மேலே இரண்டு அங்குலத்தில் ரத்னம் நான்கு தளங்களைக் கொண்டு சுவாதிஷ்டானம்; என்னும் சக்ரமானது விளங்குகிறது. ஆறு இதழ்களோடு ஆறு அக்ஷரங்களோடு செந்நிறப் பொலிவுடன் விளங்கும் அத்தாமரையை அறிஞர்கள் சுவாதிஷ்டானம் என அழைப்பார்கள். அவ்விடத்தில் பாலன் என்ற சித்தனும், ராகினி என்ற தேவியும் வசிக்கின்றனர்.

ஆறு இதழ்களிலும் பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினி, ரமாசம்பேஷ்டி என ஆறு தேவிகளும் வசிக்கின்றனர். இந்த ஆதாரமானது தனக்கு மேலான அக்னி தத்தவத்துடன் இணைந்து விளங்குகிறது. இவ்விடத்திலேதான் குண்டலினி தானே அதிஷ்டானமாகி கிரந்திகளைச் செய்து கொண்டிருக்கும் என சாத்திரங்கள் கூறுவதால், அந்த ஆதாரத்திற்குச் சுவாதிஷ்டானம் எனப் பெயர்.

சித்தாந்த சாத்திரமானது சரஸ்வதியோடு கூடிய பிரம்மாவை, அபயம், வரதம், கமண்டலு, அக்ஷமாலை இவைகளை நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டு அக்ஷரங்களோடு கற்பனை செய்யப்பெற்ற பத்மத்திலே காந்தியுடன் சிந்தனை செய்யவேண்டும் எனக் கூறப்படுகின்றது. சக்தி உபாசகர்கள் மேதஸ் என்ற தாதுவைத் தனது இருப்பிடமாக கொண்ட காசினி என்ற தேவதையை தியானம் செய்கின்றார்கள். இதே போன்று மற்ற ஆதாரங்களும் கூறப்பட்டிருக்கின்றன.

ஸ்ரீசக்ரத்தைப் பூஜிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் குருவினுடைய பரம்பரை வழிவந்த உபதேசம் பெற்று ஒவ்வொன்றையும் நன்கு கவனித்துச் செய்யவேண்டும். குருவினுடைய முன்னிலையில் பூஜைகள் செய்து, அவருடைய அனுமதியைப் பெற்றுத் தனிமையில் பூஜைகள் செய்ய வேண்டும் என்பது நமது முன்னோர்களுடைய மரபாகும்.




நவாவரண அமைப்பு

அம்பிகையை ஸ்ரீசக்ரம் அல்லது ஸ்ரீ சக்ர மேருவில் நவாரண பூஜை செய்வது சிறப்பு. நவ ஆவரணம் என்றால் ஒன்பது சுற்றுக்கள் என்பது பொருள். ஆவரணம் என்றால் சுற்று அல்லது அடைப்பு என்று பொருள் கொள்ளலாம்.

ஸ்ரீசக்கரத்தில் முதல் சதுர வடிவாய் உள்ள மூன்று கோடுகள் த்ரைலோக்ய மோகன சக்ரம் எனப்படும். இது முதலாவது ஆவரணம். இதில் உள்ள சக்திகள் பிரகடயோகினிகள் எனப்பெறுவர்.

இரண்டாவது ஆவரணம் ஸர்வாசாபரிபூரக சக்ரம் ஆகும். இதில் உள்ள சக்திகள் குப்தயோகினி ஆவர்.

மூன்றாவது ஆவரணம் எட்டுத்தளம் உடைய ஸர்வஸம்க்ஷோபண சக்ரம். இதில் உள்ள சக்திகள் குப்ததர யோகினிகளாவர்.

நான்காவது ஆவரணமான பதினான்கு கோணம் உடைய ஸர்வஸெளபாக்ய சக்ரத்தில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர்.

ஐந்தாவது ஆவரணம் வெளிப்பத்துக்கோணம், ஸர்வரக்ஷாகரசக்ரம். இதில் உள்ள சக்திகள் குலோத்தீர்ண யோகினிகளாவர்.

ஆறாவது ஆவரணம் பத்துக் கோணமுடைய ஸர்வார்த்தஸா - தகசக்ரம். இதில் உள்ள தேவதைகள் நிகர்ப்ப யோகினிகள்.

ஏழாவது ஆவரணம் எட்டுக்கோணமுடைய ஸர்வரோகஹர சக்ரமாம். இதில் உள்ள சக்திகள் ரஹஸ்யயோகினிகளாவர்.

எட்டாவது ஆவரணம் முக்கோண வடிவமுடைய ஸர்வஸித்திப்ரத சக்ரமாகும். தேவதைகள் அதிரஹஸ்ய யோகினிகளாவர்.

ஓன்பதாவது ஆவரணம் ஸர்வானந்த மய சக்ரம். இது பிந்து வடிவமானது. இதில்தான் பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் இருந்து உலகை ரக்ஷிக்கின்றனர்.




அர்ச்சனையும் மலர்களும்
  • விநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்).
  • பரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.
  • விஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிகக் கூடாது.
  • பவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.
  • விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.
  • துலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
  • மலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.
  • வாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.
  • அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.
  • ஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.
  • தாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.
  • வாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்;ந்திருந்தது. வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது. நுகரப்பட்டது. ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.
  • சம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.
  • மலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.
  • முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.
  • துளசி, முகிழ் (மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.
  • பூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.
  • திருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.
  • அபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.
  • குடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
  • பெரு விரலும் மோதிர விரலும் சேர்ந்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.
  • கோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • பூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூப தீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.



வன்னி மரத்தின் தெய்வீக சக்தி

வன்னி மரத்திற்கு தெய்வீக சக்தி அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுவது உண்மையா?

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள். தற்காலத்தில் அபூர்வமாகிவிட்ட வன்னிமரத்தை வழிபட்டால் வழக்குகளிலும், தேர்வுகளிலும் வெற்றிகளை எளிதாகக் குவிக்கலாம் என்பது உண்மையே. பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னிமரத்தடி பொந்து ஒன்றில் மறைத்து வைத்தார்களாம். உமாதேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும், புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகிலுள்ள சாத்துனுர் பாசிக்குளம் விநாயகர், சாஸ்தாவுக்கு அக்னி சொரூபராக வன்னி மரவடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது. விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கு விருப்பத்துக்குரிய வன்னிமர இலையை, வடமொழியில் சமிபத்ரம் என்பார்கள்.




தோப்புக்கரணம்

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரீட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுண்டு.

ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.

அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார்;. பரீட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார்.

ஆதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை நுநுபு கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூட்ரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Austism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கிறது.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புகரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுதுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிபட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பமு மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?


MAKE YOUR CONTRIBUTIONS

Donate for Sevas & Homas to our Holy Universal Mother Goddess Sri Merupuram Mahabhadrakaliamman, London and get divine blessings.

Donate Now >>